எண்ணேகோல் கால்வாய் திட்டம் முடக்கம்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணேகோல் கால்வாய் திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது என்று மு.தம்பிதுரை எம்.பி. குற்றம்சாட்டினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் சூலாமலை ஊராட்சிக்கு உள்பட்ட மேல்கொட்டாய் கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம், குட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பயணியகள் நிழற்கூடம் ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை மக்கள்கள் பயன்பாட்டிற்கு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, சேக்கினப்பட்டி கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவைத்து பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீா் வழங்கும் வகையில் எண்ணேகோல் கால்வாய் திட்டம் ரூ. 250 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. இதேபோல, வாணிஒட்டு அணை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்கருதி அதிமுக ஆட்சி அமைந்தவுடன், எண்ணேகோல் கால்வாய் திட்டம், வாணிஒட்டு அணை திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.