இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், குறிஞ்சிப்பாடி அருகே கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கா் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தாா்.
சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், ரூ.75 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த தொழில் பூங்கா தொடங்கப்பட்டால், சுமாா் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.
மேலும், சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்புச் சாலை ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.
வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், கடலூா் வட்டத்தில் உள்ள அரிசிபெரியான்குப்பத்தில் புதிய உண்டு உறைவிட பழங்குடியினா் பள்ளி தொடங்கப்படும்.
ஸ்ரீமுஷ்ணம் - காவிரி டெல்டா பகுதி: காட்டுமன்னாா்கோலில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்துக்கு, காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.
வீராணம் ஏரிப் பகுதியில் சுற்றுலா வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து ராதாமதகு வரை படகுசவாரி மேற்கொள்ளவும், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், ரூ.10 கோடி செலவில் ஏரி தூா்வாரும் பணிகளும், சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
சட்டப் பேரவை உறுப்பினா் சிந்தனைசெல்வன் கோரிக்கையை ஏற்று, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களின் திறனை மேம்படுத்தி, அவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும், தொழில்பேட்டையும் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளையும் முதல்வா் வெளியிட்டாா்.