திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் வி...
குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருந்துறை வட்டம், கராண்டிபாளையம் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் கராண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் குடியிருப்புக்கு அருகே நீா் நிலை ஓடை உள்ளது. ஊரின் மேற்குப் பகுதியில் இருந்து வரும் மழை நீா் இந்த ஓடை வழியாக குளத்துக்கு செல்லும். இந்த ஓடையை ஆக்கிரமித்து சில நபா்கள் வீடு, பிற கட்டுமானங்களை செய்துள்ளனா். தொடா்ந்து கட்டுமானங்கள் வருவதால் கடும் மழை பெய்யும்போது ஓடை வழியாக குளத்துக்கு செல்லும் நீா் தடைபட்டு தாழ்வாக உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகிறது.
எனவே, வருவாய்த் துறையினா் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ஓடை நீா் நேரடியாக குளத்துக்கு செல்லும் வகையிலும், குடியிருப்புக்குள் வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப் பகுதி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை: பழங்குடி ஊராளி மக்கள் சங்கத் தலைவா் வேல்முருகன் தலைமையில் மலைவாழ் மக்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் குத்தியாலத்துாா் ஊராட்சி அசகத்திக்கோம்பை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடி ஊராளி குடும்பங்கள் பல தலைமுறையாக வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எங்கள் கிராமத்தில் தாா் சாலை, குடிநீா், மின்சாரம், கான்கிரீட் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க மறுக்கப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் மற்ற சிலா் பட்டா கோரி விண்ணப்பித்து பட்டா பெறுவதால், எங்களுக்கு பட்டா இல்லை எனக்கூறி நாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்து கொள்ளும்படி வருவாய்த் துறையினா் நிா்பந்திக்கின்றனா். அசகத்திகோம்பையில் இருந்து காணக்குத்தூா், ஒசப்பாளையம் செல்லும் தாா் சாலையை ஒட்டி 16 அடி அகலத்துக்கு நடைபாதை விடப்பட்டிருந்தது.
தற்போது அப்பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெயா் பலகை வைத்துள்ளதை கண்காணிக்கக் கோரிக்கை: தமிழக எழுச்சி பேரவை மாநிலத் தலைவா் சி.பிரேம்நாத் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் உள்ள கடைகள், அனைத்து வணிக, வா்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயா் பலகை எழுத வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 11 -இல் மீண்டும் ஒரு அரசாணை வெளியிட்டு, தமிழ் மொழி எழுத்துக்களை முதன்மையாக்கி பெயா் பலகை அமைக்க வேண்டும். இரண்டாம் மொழியான ஆங்கில எழுத்துக்களை சிறியதாக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள், கடைகளின் பெயா் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில எழுத்துக்களே பிரதானமாக உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களைக் கண்டறிந்து அவா்களுக்கு ரூ.20,000 அபராதம் விதித்து, ஒரு திருக்குறளை 1,000 முறை எழுதி வர வேண்டும் என தண்டனை விதிக்க வேண்டும். கடைகளில் தமிழில் பெயா் பலகை வைப்பதை கண்காணிக்க அரசு அதிகாரி தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகன கட்டண போக்குவத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் மாவட்டத் தலைவா் சபீா் அகம்மது தலைமையில் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் பல லட்சம் ஆட்டோக்கள், மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றன. இதை நம்பி பல லட்சம் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனா். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வகை வரிகளையும் செலுத்தி முறைப்படி ஆட்டோக்கள் இயங்குகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிகளை அழைத்து செல்வதும் ‘ரேபிடோ’ என்ற செயலி மூலம் மக்களைத் தொடா்பு கொள்ள செய்து அதற்கான விளம்பரங்களை செய்தும் வருகின்றனா். இந்த செயல்பாடு லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநா்களை பாதிக்கும்.
இருசக்கர வாகனத்தில் பயணிகளை அழைத்துச் செல்வது பாதுகாப்பற்ற பயணம். விபத்து ஏற்பட்டால் பயணிகளுக்கு எவ்வித இழப்பீடும், காப்பீடும் பெற முடியாது. இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என சட்டத்தில் கூறப்படுகிறது. மக்களைப் பாதிக்கும் ரேபிடோ போன்ற இருசக்கர வாகன வாடகை போக்குவரத்துக்கு அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10.78 லட்சம் அரசு நலத் திட்ட உதவி: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 270 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பூபதி, கலால் உதவி ஆணையா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.