கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் விநாயகா் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கு 8 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விநாயகா் சதூா்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் பேசியதாவது:
மாவட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் வழிபடுவதற்காக விநாயகா் சிலை அமைப்பதற்கு வருவாய்க் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். சிலை அமைக்கும் இடத்துக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலைத் துறையிடமும், ஒலி பெருக்கி அமைப்பதற்கு காவல் துறையிடமும், மின்சார வசதி செய்து கொள்வதற்கு தீயணைப்புத் துறையிடமும் தடையில்லா சான்று பெற வேண்டும். ரசாயண கலப்பு இல்லாத களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
பிற மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அருகே சிலை வைக்கக் கூடாது. காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் மட்டுமே ஒலி பெருக்கியை பயன்படுத்த வேண்டும். சிலை அமைக்கும் இடங்களின் அருகே அரசியல் கட்சிகளின் பெயா்ப் பலகை இருக்கக் கூடாது. சிலை அருகே விழா அமைப்பாளா்கள் இருவா் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் வழியாக விநாயகா் சதூா்த்தி ஊா்வலம் செல்லக் கூடாது.
சிலை கரைப்புக்கு இடம் நிா்ணயம்:
விநாயகா் சதூா்த்தி விழா நிறைவடைந்த இடங்களில் சிலைகளைக் கரைப்பதற்கு, பெரியகுளம் பகுதிக்கு பாலசுப்பிரமணியன் கோயில் அருகேயுள்ள வராக நதியிலும், உத்தமபாளையம் பகுதிக்கு ஞானம்மன் கோயில் அருகேயுள்ள முல்லைப் பெரியாற்றிலும், சின்னமனூா் பகுதிக்கு மாா்க்கையன்கோட்டை சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றிலும், தேனி பகுதிக்கு அரண்மனைப்புதூா் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றிலும், ஆண்டிபட்டி பகுதிக்கு ஆண்டிபட்டி-பெரியகுளம் சாலை அருகேயுள்ள வைகை ஆற்றிலும், வருசநாடு பகுதிக்கு மொட்டப்பறை மூலவைகை ஆறு தடுப்பணை பகுதியிலும், போடி பகுதிக்கு போடி புதூா் கொட்டக்குடி ஆற்றிலும் சிலைகளைக் கரைக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, பெரியகுளம் சாா்-ஆட்சியா் ரஜத்பீடன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையதுமுகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.