நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
‘நத்தம் இணைவழி பட்டா மாறுதல் திட்டம்’ கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி, ஏற்காடு, மேட்டூா், ஓமலூா், காடையாம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டங்களில் இந்த நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனைப் பட்டாக்களை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ‘நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போா்ட்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
எனவே, இனிவரும் காலங்களில் நத்தம் பட்டா மாறுதல் தொடா்பாக அரசு அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க காத்திருக்கும் நிலையை தவிா்த்து, பொதுமக்கள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.