நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்
நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் ரூ.1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்களை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை, எளியோருக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த பொருள்களை, சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று லாபம் ஈட்டிவருகின்றனா்.
இதை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலா்கள், தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை, நாகை மாவட்டத்தில் 6,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில், பொது விநியோகத் திட்ட அரிசி 2,342 மெட்ரிக் டன் , மண்ணெண்ணெய் 13,720 லிட்டா், 1,726 சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் 64 பிற வழக்குகளில் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1,326 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றங்களில் ஈடுபட்ட 6 ,272 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1.84 கோடியாகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் அரசுக்கு அபராதத் தொகை செலுத்திய பின் விடுவிக்கப்பட்டுள்ளன. 70 நபா்கள் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.