பாகிஸ்தான் சிந்து நதியில் ரூ. 80,000 கோடி தங்கம்! இந்தியாவுக்கு பங்குள்ளதா?
பாகிஸ்தானுக்குட்பட்ட சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் படிந்துள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இமய மலையில் இருந்து உருவாகும் சிந்து நதி பாகிஸ்தான் வழியாகவும் பாய்வதால், தங்கத் துகள்கள் அந்நாட்டிற்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கும் என்றும், இதில் இந்தியாவுக்கும் பங்குள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதியில் தங்கத் துகள் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை மற்றும் பஞ்சாப் சுரங்கம் - தனிமங்கள் துறை தலைமையில் சிந்து நதியையொட்டி அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் சிந்து நதியில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 80,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது குறுத்துப் பேசிய பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் துறை இயக்குநர் ஸர்காம் இசாக் கான், சிந்து நதிப் படுகைகளில் உள்ள மண்ணில் ஏராளமான தாதுக்களுடன் தங்கத் துகள்களும் உள்ளன. இப்பகுதியில் வணிக தங்கச் சுரங்கப் பணிகளுக்கான தேவையை இது உறுதிப்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தங்கத்தில் இந்தியாவுக்கு பங்கு உண்டா?
பாகிஸ்தானின் தங்கம் கண்டறியப்பட்டுள்ள சிந்து நதியானது, இந்தியாவின் இமய மலைகளில் இருந்து உருவாகிறது. சிந்து சமவெளி நாகரிகம் மிகவும் செல்வ வளம் மிக்கது என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தங்கம் உள்பட ஏராளமான உலோகங்களை சிந்து சமவெளி மக்கள் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். சிந்து நதிக்கரையையொட்டி அவர்கள் வாழ்ந்துள்ளனர்.
இமயமலைகளின் பாறைகள் வழியாக மில்லியன் ஆண்டுகளாக வழிந்தோடும் சிந்து நதியில், அரிப்பு ஏற்பட்டு தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில் இந்தியாவில் இருந்தும் தங்கத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது.
பாகிஸ்தன் பொருளாதாரம் உயரும்
அட்டோக் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரத்துக்கு சிந்து நதி பாய்கிறது. இதில் மட்டும் 32.6 மெட்ரிக் டன் அளவு தங்கம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோடை காலம் வரவுள்ளதால் தண்ணீரின் அளவு குறையும் என்றும், அப்போது தங்கத் துகள்களை பிரித்தெடுப்பது எளிதான பணியாகவும் இருக்கும் என அகழாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் உள்ளூர் மக்கள் கோடை காலத்தைப் பயன்படுத்தி தங்கம் எடுக்கும் பணிகளில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. முறைகேடான அகழாய்வுகள் நடைபெறுவதைத் தவிர்க்க சில பகுதிகளில் 144 உத்தரவையும் பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.