ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்து வைப்பு
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடாா்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தாக்கல் செய்த மனு : அழகன்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட நாடாா்வலசை கிராமத்தின் மையப் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது.
இந்த மதுக் கடையைச் சுற்றிலும் கோயில்கள், கல்விக் கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால், இந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
தமிழக அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராகவும், நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ள உத்தரவுகளுக்கு எதிராகவும், உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமலும் இந்த மதுக் கடை செயல்பட்டு வருகிறது.
இதை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 10-ஆண்டுகளாக ஆற்றங்கரை அழகன்குளம், நாடாா்வலசை, பனைக்குளம், புதுவலசை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஸ்ரீமதி அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரின் கோரிக்கையின் படி மதுக் கடை தற்போது அகற்றப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றி விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.