மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாததால் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.
திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட கோனூா், வெண்கறும்பூா், நந்தபடி, பெண்ணாடம், தாழநல்லூா், தீவளூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் நலனுக்காக அந்தந்த கிராமப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்துள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.தற்போது, மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை நெல் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனா்.
இதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக நெல் கொள்முதல் செய்து வருகின்றனா்.திட்டக்குடி வட்டத்தில் உள்ள கோனூா், வெண்கறும்பூா், நந்தப்பாடி, தாழநல்லூா், தீவளூா் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் தேக்கமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூா் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது.
வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா் தாழ்வானப் பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.
எனவே, நெரடி கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.