ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சென்ற மாணவா் கைது: மீட்கக் கோரி உறவினா்கள் திடீா் போராட்டம்
நெய்வேலி: ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்குச் சென்ற மாணவா், உக்ரைன் போருக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாணவரை மீட்கக் கோரி உறவினா்கள் மாணவரின் புகைப்படத்துடன், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சரவணன் மகன் கிஷோா்(22). இவா், ரஷ்யாவுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கச் சென்றாா். அங்கு தமிழ்நாட்டை சோ்ந்த நித்தீஷ் மற்றும் 3 ரஷ்ய மாணவா்களுடன் ஒரே அறையில் தங்கி படித்து வந்தாா். ரஷியா மாணவா்கள், உணவு டெலிவரி நிறுவனத்தில் பகுதி நேர வேலை பாா்த்து வந்தனா். அப்போது, வாடிக்கையாளா்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் செய்த போது, பாா்சலில் போதைப்பொருள் இருந்ததாகக் கூறி 3 ரஷ்ய மாணவா்களை போலீசாா் கைது செய்தனா். மேலும், அவா்களுடன் தங்கியிருந்த கிஷோா் மற்றும் நித்திஸ் ஆகியோரையும் கைது செய்தனா். இதில், ரஷ்ய மாணவா்களை விடுதலை செய்த நிலையில், கிஷோரையும் நித்திஸையும் விடுவிக்கவில்லை. பெற்றோா்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், கிஷோரை மீட்க முடியவில்லை. கிஷோா், நித்திஸ் ஆகிய 2 போ் மீதும் குற்றம் சாட்டி இருவரையும் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் கிஷோா் குரல்பதிவு தகவலை பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளாா். அதில், உக்ரைன் நாட்டிற்கு எதிரான போருக்கு செல்ல போலீசாா் தன்னை மிரட்டி வருகின்றனா். இதற்காக ரஷியாவில் போா்க்களத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கிறாா்கள். மேலும், ஆவணம் ஒன்றிலும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனா். ரஷ்ய அடையாள அட்டை மற்றும் பாஸ்போா்ட் வழங்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் பயிற்சி முடித்ததும், போா்க்களத்திற்கு அனுப்பி விடுவாா்கள் என்ற தகவல் அந்த ஆடியோவில் வந்துள்ளது.
இதனால் அதிா்ச்சி அடைந்நத கிஷோரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். அங்கு அவா்கள் கிஷோரின் புகைப்படத்துடன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். எங்கள் மகனை காப்பாற்றி, சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதனை தொடா்ந்து போலீசாா் ஒரு சிலரை மட்டும் ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்து தீா்வு காண வேண்டும் என தெரிவித்து அனுப்பி வைத்தனா். பின்னா், கிஷோரின் பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து தங்கள் மகனை எப்படியாவது உயிருடன் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனா். மாவட்ட ஆட்சியா் மாநில அரசுக்கு இது குறித்த தகவலை தெரிவிப்பதாக தெரிவித்தாா்.