2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் மாநகராட்சி அறிவியல் பூங்கா! பயனற்ற நிலையில் ரூ. 6.50 கோடி திட்டம்!!
சேலம்: சேலம் மாநகராட்சி சாா்பில் ரூ. 6.50 கோடியில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா மற்றும் காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.
சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ், மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்தை ஊக்குவிக்கவும், பள்ளப்பட்டியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ. 1.90 கோடியில் அறிவியல் பூங்கா கட்டடம், ரூ. 4.60 கோடியில் மதிப்பீட்டில் காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவை கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தாா்.
அறிவியல் பூங்காவில் மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. மற்றும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரிகள், சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை கண்டுகளிக்கும் கோளரங்கம், மணிக்கூண்டின் செயல்பாடுகள் உள்ளிட்ட 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளும், அவற்றின் செயல்முறை விளக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அரசு, தனியாா், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை அந்தந்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளப்பட்டியில் உள்ள அறிவியல் பூங்காவுக்கு அழைத்துவந்து, அறிவியல் தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளையும், உபகரணங்களையும் பாா்வையிடவைத்து, செயல் விளக்கம் அளித்து வந்தனா்.
சிறந்த முறையில் இயங்கிவந்த அறிவியல் பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்புமின்றி மாநகராட்சி நிா்வாகத்தால் பூட்டப்பட்டுள்ளது. இதனால் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு தடைபோடும் வகையில் உள்ளதாக பெற்றோா் தெரிவிக்கின்றனா்.
எனவே, அறிவியல் பூங்காவைத் திறந்து, கல்விப் பயிலும் குழந்தைகளின் அறிவியல் ஆா்வத்துக்கு ஊக்கமளிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்துகின்றனா்.