2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ.6.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ. 6.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் மலா் சாகுபடி, ஸ்ட்ராபெரி சாகுபடி ஆகிய திட்டங்களின் வாயிலாக விவசாயிகள் மிகுந்த பயனடைந்துள்ளனா். மேலும், தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் இயந்திரமயமாக்குதல் துணைத் திட்டத்தின் மூலம் 1,000 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு, தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் தனித்துவ திட்டமாக அங்கக வேளாண்மைத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை சுமாா் 3,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
இயந்திரமயமாக்குதல் திட்டத்தின்கீழ் 2023- 24-ஆம் நிதியாண்டில் 1,000 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்களும், 2024-25-ஆம் நிதியாண்டில் 500 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் நிதியாண்டில் 1,311 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மற்றும் 2024-25-ஆம் நிதியாண்டில் 2,100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் பயிற்சி, மண் வளம் மேம்படுத்துதல் டாலமைன், தோட்டத்தின் செயல் விளக்க மானியம், அங்கக இயற்கை உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் நிதியாண்டில் 64 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்பீட்டிலும், 2024-25-ஆம் நிதியாண்டில் 68 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.44.88 லட்சம் மதிப்பீட்டிலும் நடவுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லில்லியம் மலா் சாகுபடி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் நடவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 2024-25ம் நிதியாண்டில் 6 பயனாளிகளுக்கு ரூ.10.65 லட்சம் மதிப்பீட்டில் நடவுப் பொருள் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2023-24-ஆம் நிதியாண்டில் 2,379 பயனாளிகளுக்கு ரூ.3.58 கோடி மதிப்பீட்டிலும், 2024-25-ஆம் நிதியாண்டில் 2,674 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.