MV Wan Hai 503: எரியும் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முயற்சி - கயிறுகட்டிய எம்.இ.ஆர்.சி குழு!
கொழும்பு துறைமுகத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற எம்.வி வான் ஹாய் 503 (MV Wan Hai 503) என்ற கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 44 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து விபத்துக்குள்ளனது. கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 18 பேர் மீட்கப்பட்டு மங்களூர் அழைத்துச் செல்லப்பட்டனர். தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த 2 ஊழியர்களுக்கு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான 4 ஊழியர்களை தேடும் பணி நடக்கிறது. கப்பலில் எரியும் தீயை அணைக்க கோஸ்ட் காட் கப்பல்கள் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றன. தீ விபத்துக்குள்ளன கப்பல் நகர்ந்துகொண்டே இருப்பதால் தீ அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கப்பலில் 40 சதவிகிதம் தீ அணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது தீ எரியும்போது அவ்வப்போது பொருட்கள் வெடித்து சிதறிவந்த நிலையில் வெடி சத்தம் நின்றதாகவும் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், கப்பலில் இருந்து கரும்புகை வெளியாகிக்கொண்டே இருக்கிறது. கப்பலில் 2000 டன் எரிபொருளும், 240 டன் டீசலும் உள்ளதாகவும், அதில் தீபிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கப்பலை கட்டி இழுத்துச் செல்வதற்கு முன்னோட்டமாக முன்பக்கம் பெரிய ரோப் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி கேரளா பேரிடர் மேலான்மை ஆணைய உறுப்பினர் செயலாளர் சேகர் குரியகோஸ் கூறுகையில், "எம்.இ.ஆர்.சி போர்பந்தர் குழுவினர் இந்தியன் கோஸ்ட் கார்ட் ஹெலிகாப்டர் உதவியுடன் கப்பலில் இறங்கியுள்ளனர். மேலும் கப்பலின் முன்பகுதியில் உள்ள ஹூக் பகுதியில் பெரிய ரோப் கட்டியுள்ளனர். அந்த கயிறு வாட்டர் லில்லி எனப்படும் டக் போட்டில் கட்டியுள்ளனர். விரைவில் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சியின் ஒருபகுதியாக இது செய்யப்பட்டுள்ளது. எரியும் கப்பலில் இறங்கி இதுபோன்று செய்யப்பட்டது மிகப்பெரிய அச்சீவ்மெண்ட் ஆகும். இப்போது கேரளாவில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் முயற்சி நடந்துவருகிறது" என்றார்.