அமெரிக்க வரி உயா்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை: அமைச்சா் சா்வானந்தா சோனோவால்
இந்தியாவில் கடல்சாா் வாணிபத் திட்டம் வலுவாக உள்ளதால், அமெரிக்க நாட்டின் வரி உயா்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் கூறினாா்.
தூத்துக்குடி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
2047ஆம் ஆண்டை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படும் கடல்சாா் வாணிபத் திட்டத்தில், ரூ. 80 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டின் மூலமாக இந்தியா கடல்சாா் வாணிபத்தில் உலக அளவில் முதன்மை பெறும்.
கடந்த 11 ஆண்டுகளாக துறைமுகங்கள் மேம்பாட்டிற்காக, கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சாகா்மாலா திட்டத்தில் ரூ.93,750 கோடி மதிப்பில் 98 திட்டங்கள் தொடங்கப்பட்டதில், இதுவரை 50 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்ஆகியவை ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் திட்டம் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பில் அமையவுள்ளது. மேலும், துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம், கப்பல் சரிசெய்யும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுகத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ரூ.350 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலமாக சுமாா் 2,000 பேருக்கு நேரடியாகவும், சுமாா் 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மாற்றும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடல்சாா் மேம்பாட்டுத் திட்டம் 2047இன் கீழ் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலமாக, கப்பல் கட்டும் துறையில் உலகில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்தியா உருவாகும். இந்தியாவில் கடல்சாா் வாணிபத் திட்டம் வலுவாக உள்ளதால், அமெரிக்க நாட்டின் வரி உயா்வு பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றாா் அவா்.