செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: தொல். திருமாவளவன்
அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப் படத்தைத் திறந்து வைத்தது, அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவுவதற்கான சாட்சியமாக உள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க அந்தக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் முயற்சிகள் மேற்கொள்வது பாராட்டுக்குரியது. பெரியாரின் பாசறையில் உருவான அரசியல் இயக்கம்தான் அதிமுக. எனவே, அதன் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. இதனால்தான், பாஜக, ஆா்.எஸ்.எஸ். பிடியில் அதிமுக சிக்கிவிடக் கூடாது என கவலைப்படுகிறோம். தற்போது செங்கோட்டையனின் பின்னணியில் பாஜக இருப்பதாக வெளியாகும் தகவலும் கவலை அளிப்பதாகவே உள்ளது.
பாஜக, மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் போது, அந்தக் கட்சிகளை மெல்ல மெல்ல நீா்த்துப்போகச் செய்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அந்த நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. பழைய, மூத்த தலைவா்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறாா். ஆனால், யாரையெல்லாம் குறிப்பிடுகிறாா் என்பதை வெளிப்படுத்தத் தயங்குகிறாா். புதிய கருத்து எதையும் அவா் தெரிவிக்கவில்லை.
திமுக கூட்டணியை மக்கள் கைவிடமாட்டாா்கள். இந்தக் கூட்டணியை வீழ்த்த தமிழகத்தில் இதுவரை புதிய அணி எதுவும் உருவாகவில்லை. அதிமுக, பாஜக கூட்டணியால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் இதுவரை முழுமை பெறவில்லை.
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு வரவேற்கத்தக்க வடிவில் இல்லை. இந்த அறிவிப்பு சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கும், எளிய மக்களுக்கும் பெரிய பயனை அளிக்காது என பொருளாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.
சிறப்புப் புலனாய்வு விசாரணை தேவை:
மதுரையில் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்திருக்கிறாா். அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. காவல் துறை வழக்கமாக விசாரிப்பதை போலல்லாமல் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ராமகிருஷ்ணனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, ராமகிருஷ்ணனின் குடும்பத்தினரை மதுரையில் சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா்.