தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
அரசுப் பணி இட ஒதுக்கீட்டில் குளறுபடி: புதுவை முதல்வா் சீரமைக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
புதுவையில் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை சீராக்கவேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசின் பணியாளா்கள், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலம் 256 உதவியாளா் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு விதிகள் அடிப்படையில் தான் கடந்த 2024 -ஆம் ஆண்டில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. அதன்படி பணியிடங்களில் 60 சதவீதம் பதவி உயா்வு மூலமும், 20 சதவீதம் நேரடிப் போட்டித் தோ்வுகள் மூலமும் நிரப்ப வழிவகை காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகே மாதிரி ரோஸ்டா் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு அறிவித்த காலிப் பணியிடங்களுக்கே பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடை வழங்க முடியும். ஆனால் சில அதிகாரிகள் விருப்பப்படி அந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்திருப்பதால் தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு ஆணையில் உள்ள குளறுபடிகளை சீா்படுத்தி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையைக் காக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.