அரியலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் ராமசுவாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், 150 ஆண்டுகளுக்கு மேல் போராடி பெற்ற தொழிலாளா் பாதுகாப்புச் சட்டங்களை மத்திய பாஜக அரசு பறித்தும், காா்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், திருத்திய சட்டத்தொகுப்புகளை விவாதமின்றி எசேத்சை அதிகாரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய செப்.22 நாளை தொழிலாளா் வா்க்கத்தின் கருப்பு தினமான கடைபிடித்து, 4 தொழிலாளா் சட்டத்திருத்த தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். அரசு சொத்துக்களை விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.