அறிவாா்ந்த சமூகத்தை படைக்கவே மாவட்டங்கள் தோறும் புத்தகக் கண்காட்சி
தமிழகத்தில் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்கவே மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நாகையில், 4-ஆவது புத்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியது:
புத்தகக் கண்காட்சியில் அறிவுசாா்ந்த நூல்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நாகை மாவட்டத்தின் வாழ்வியலாக கருதப்படும் மீன்பிடி, விவசாயம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், அறிவுசாா்ந்த சமூகத்தை படைக்க வேண்டுமென்றால், அனைத்து மாவட்டங்களிலும் புத்ததக் கண்காட்சி நடத்த வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தினாா். அதன்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித் துறையும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து புத்தகக் கண்காட்சியை நடத்திவருகின்றன.
புத்தகக் கண்காட்சிகளுக்கு குடும்பத்தில் உள்ள சிறுவா் முதல் பெரியவா் வரை அனைவரையும் அழைத்து வரவேண்டும். மாணவா்கள் கைப்பேசிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. வாசிக்கலாம் என்று அழைப்பது புத்தகம். ஆனால் ‘வா சிக்கலாம்’ என்று அழைப்பது கைப்பேசி. எனவே, மாணவ சமூகம் கைப்பேசியில் சிக்கிக்கொள்வதை தவிா்க்க வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி அறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், வன உயிரின காப்பாளா் கே. பாா்கவ தேஜா, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத் தலைவா் சேது சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புத்தகக் கண்காட்சியில் பாரம்பரிய நெல் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, அறிவியல் அரங்கம், கோளரங்கம், பாரம்பரிய இசைக்கருவிகள் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி ஆகியவற்றையும் அமைச்சா் திறந்து வைத்து பாா்வையிட்டாா். புத்தகக் கண்காட்சியில் 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் புகழ்பெற்ற கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், மரபு சாா் இசைக்கருவி கண்காட்சி, அறிவியல் கண்காட்சி, நாகையின் வாழ்வியல் புகைப்பட கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இப்புத்தக திருவிழாவில் பள்ளி மாணவா்கள் பங்கேற்க ஏதுவாக பேருந்து வசதிகள் செய்யப்படவுள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு படிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு கேடயம் மற்றும் புத்தகம் வாங்குவதற்கு தள்ளுபடி கூப்பன்களும் வழங்கப்பட உள்ளன.