திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு
இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.
இதையடுத்து, பாகிஸ்தானியா்களுக்கான விசா ரத்து, சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் என இந்தியா அதிரடி முடிவுகளை எடுத்தது. அப்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) விதிகளின்படி, ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தக் கூடாது என பிற நாடுகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தடை விதிக்க முடியும். அதன் பிறகு தடையைத் தொடர வேண்டுமானால், அதனை மேலும் நீட்டித்து புதிய உத்தரவை வெளியிட வேண்டும். இதன்படி மாதம்தோறும் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹோல் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்திய விமானங்கள் தங்கள் வான் வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.