இரண்டாம் பாகமும் வெற்றி! 500 நாள்களைக் கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் வெற்றிகரமாக 500 நாள்களைக் கடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது.
இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. பிரியா தம்பி திரைக்கதை, வசனம் எழுத டேவிட் சார்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரை இயக்குகிறார்.
முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் இவர்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
பொதுவாக முதல் பாகம் வெற்றியடைந்த தொடர்கள் இரண்டாம் பாகம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாமல் குறுகிய காலத்தில் முடிக்கப்படும்.
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்கள் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கவில்லை.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதுடன், டிஆர்பியிலும் முன்னனியில் உள்ளது.
இதைக் கொண்டாடும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடர் குழுவுக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஸ்டார்ட் மியூசிக் சீசன் - 6: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!