ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்
எதிர்நீச்சல் -2 தொடரில் நடிக்கும் கோலங்கள் வில்லன்? நடிகர் அஜய்யின் வைரல் விடியோ!
எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் கோலங்கள் தொடரில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் அஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்திற்கு முக்கியமான பாத்திரத்தை திட்டமிட்டு வைத்துள்ளதாகவும், அதன் பிறகுதான் எதிர்நீச்சலின் 2 ஆம் பாகமே தொடங்கும் என அஜய் பேசியுள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஆதி குணசேகரன் பாத்திரம் பெரிதாக பேசப்பட்டதைப் போன்று, இரண்டாம் பாகத்தில் இந்த பாத்திரம் பேசப்படும் எனவும் தெரிகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களே இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றன. எனினும் மக்களிடையேயான வரவேற்பும் முந்தைய பாகம் பெற்ற டிஆர்பி புள்ளிகளும் இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை.
இதனிடையே கோலங்கள் தொடரில் ஆதி என்ற எதிர்மறையான பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்ற நடிகர் அஜய், எதிர்நீச்சல் -2 தொடர் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ஒரு பாத்திரத்தை இயக்குநர் திருச்செல்வம் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த பாத்திரம் தோன்றியதுடன் எதிர்நீச்சலின் டிஆர்பி எதிர்பாராத புள்ளிகளை எட்டும் எனக் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் இன்னும் தொடங்கவே இல்லை என்றும், இரண்டாம் பாகத்தின் தொடக்கமே அந்த பாத்திரத்தில் இருந்துதான் ஆரம்பமாவதாகவும் அஜய் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அந்த பாத்திரத்தில் நடிக்கப்போவது தாங்கள்தானா? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு தெரியாது என பதிலளித்த அஜய், அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்றும், அந்த பாத்திரத்தின் அறிமுகமே டிஆர்பி உச்சம் பெற போதுமானது எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதல் பாகத்தைப்போன்று இரண்டாம் பாகத்திற்கு வேறு ஒரு பாத்திரத்தை இயக்குநர் எழுதி வைத்துள்ளதாக அஜய் கூறியது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலங்கள் தொடரில் மிரட்டியதைப் போன்று இந்தப் பாத்திரத்தில் அஜய் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | 5 ஆண்டு பயணம்... திருப்புமுனை காட்சிகளுடன் நிறைவடைகிறது பாக்கியலட்சுமி!