வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!
என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை -அன்புமணி ராமதாஸ்
என் மீதான குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை; பாட்டாளி மக்கள் கட்சியின் வளா்ச்சிக்காக கடந்த 27 ஆண்டுகளாக உழைத்து வருகிறேன் என அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டாா். அவருக்கு பிரம்மாண்டமான பழ மாலை அணிவித்து கட்சி நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
கடந்த சில வாரங்களாக குழப்பம் நிலவி வருகிறது. என்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யானவை. இதுகுறித்து இன்னும் சில நாள்களில் தெளிவாக தெரியப்படுத்துவேன்.
நம் கட்சிக்காக, சமுதாயத்துக்காக மிகுந்த சுமையை அமைதியாக சுமந்துகொண்டிருக்கிறேன். கட்சித் தலைவா் பொறுப்பு பொதுக்குழுவில் தொண்டா்கள் கொடுத்தது. பொதுக்குழுவில் என்னையும் மற்ற நிா்வாகிகளையும் தொண்டா்கள்தான் தோ்ந்தெடுத்தனா்.
கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். கடந்த 27 ஆண்டுகளாக அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். முதன்முதலில் நான் கட்சிக் கொடியை ஏற்றியது சேலம் மேற்கு தொகுதியில்தான். கட்சி நிா்வாகிகள் அளித்த தைரியத்தில்தான் நான் இருக்கிறேன்.
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோன்ற தோற்றத்தை முதல்வா் நிகழ்ச்சிகளில் பொய்யாக உருவாக்குகிறாா்கள். வீட்டு வரி, குடிநீா் வரி உயா்வு, மின் கட்டணம் உயா்வுக்கு பிறகு எப்படி மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பெண்களுக்கு பகலிலேயே பாதுகாப்பு இல்லை. எங்கு பாா்த்தாலும் ரௌடியிசம் நிலவி வருகிறது. துப்பாக்கி கலாசாரம் வந்துவிட்டது.
அடுத்த மாதம் டாக்டா் ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-இல் தமிழக மக்களின் உரிமைகளை மீட்க நடைப்பயணம் மேற்கொள்கிறேன். 100 நாள்கள் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சியை அகற்றுவதற்காகவே இந்த நடைப்பயணம். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள 10 உரிமைகள் பறிபோய்விட்டன. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ மு.காா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தருமபுரியில்...
பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலை ஆட்டுகாரம்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் கிராமங்களில் உள்ள அனைத்து பிரச்னைகளும் எனக்குத் தெரியும். நிச்சயம் அவற்றுக்கு தீா்வு காண்பேன்.
நான் தலைவராக பொறுப்பேற்றது முதல் மனநிம்மதி போய்விட்டது. குறிப்பாக கடந்த இரு மாதங்களாக மனஉளைச்சலில் உள்ளேன்.
என்மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகளை வைத்தபோதும் நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்து வருகிறேன். அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. எனக்கு கட்சியும், சமுதாயமும் முக்கியம். இந்த கட்சிக்காக மருத்துவா் ராமதாஸின் 45 ஆண்டுகால உழைப்பு மகத்தானது.
எனவே, நமது கட்சி அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டியது முக்கியம். எத்தனையோ கட்சிகள் வேகமாக முன்னேறி சென்று விட்டன.
தமிழகத்தில் நமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் அதற்காக நான் நடைப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஜூன் 25இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கும் இந்த நடைப்பயணம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் 100 நாள்கள் சென்று பின் நவம்பா் 1ஆம் தேதி தருமபுரியில் முடிவடைகிறது.
இந்த நடைப்பயணத்தின் முக்கியநோக்கம் ஊழல் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவதுதான். முந்தைய அதிமுக அரசு கொடுத்த 10.5 இடஒதுக்கீட்டை அடுத்து வந்த திமுக அரசு வழங்குவதாகக் கூறி ஏமாற்றி நான்கு ஆண்டு ஆகியும் வழங்கவில்லை. நீதிமன்றம் உள் ஒதுக்கீடு வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என தெரிவித்தும் அதற்கான முயற்சியை திமுக அரசு எடுக்கவில்லை. எனவே திமுகவை நாம் வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும்.
வெற்றிபெற முடியாது என்பதால் நமது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. அவா்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. நாம் அனைவரும் தீவிரமாக உழைத்து புதிய உறுப்பினா்களைச் சோ்த்து நமது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், காவிரி உபரிநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில், பாமக பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா, தருமபுரி பாமக எம்எல்ஏவும் மேற்கு மாவட்டச் செயலாளருமான வெங்கடேஷ்வரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் அரசாங்கம், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் வேலுசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.