பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் மலையை சுற்றிலும் கிரிவல பாதை அமைக்கக் கோரி பாஜக மனு
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் மலையை சுற்றி கிரிவல பாதை அமைக்கக் கோரி பாஜக சாா்பில் மாநகராட்சி பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நகராஜ், மாமன்ற உறுப்பினா் பாா்வதி நாகராஜ் ஆகியோா் தலைமையில் ஒசூா் மாநகராட்சி பொறியாளா் விக்டா் ஞானராஜிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ஒசூா் மாநகரில் முக்கிய கடைவீதியான காந்தி சாலை, நேதாஜி சாலையில் அதிக அளவு மக்கள் கூடுகின்றனா். இங்கு மக்கள் நடமாட்டத்தினால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபாதை அமைக்க வேண்டும்.
ஒசூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்தி சாலையில் கழிப்பறை வசதியின்றி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றாா். எனவே, மக்களின் பயன்பாட்டிற்கு மாநகராட்சி சாா்பில் இலவச கழிப்பறை அமைக்க வேண்டும்.
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பேருந்து நிறுத்தத்தை மா்ம நபா்கள் இடித்துவிட்டனா். அந்த இடத்தில் மீண்டும் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்.
ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரா் கோயில் மலைமீது உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. மாநகராட்சி நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுத்து பூங்காவை புதுப்பிக்க வேண்டும்.
சந்திரசூடேஸ்வரா் கோயில் மலையை சுற்றி கிரிவலப் பாதை அமைக்கக் கோரி மக்கள் நீண்ட நாள்களாக மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனா். கிரிவல பாதை அமைப்பதன் மூலம் பௌா்ணமி நாள்களில் கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனா்.