துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
``ஒளியை விட வேகமாக குதித்தவர்'' - உலக சாதனை படைத்த ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்தார்!
விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங்கில் உலக சாதனை படைத்த `Fearless Felix' எனப் புகழப்படும் ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் (56) உயிரிழந்தார்.
இத்தாலியைச் சேர்ந்த இவர் 1999-ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்தார். அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட் மூலம் மிக உயரமான இடத்திலிருந்து குதித்த நபர்' என்ற சாதனைப் புரிந்தார்.
2012-ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் என்ற சாதனையை நிகழ்த்தி பிரபலமானார்.
மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஒலியின் வேகத்தை விட வேகமாக பூமியை நோக்கி வந்தவர் என்ற சாதனையால் உலகம் முழுவதிலிருந்து இவர் கவனம் பெற்றார். ஸ்கை டைவிங் குறித்து ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர், ``உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார்.
இந்த நிலையில், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னர் உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, ``வானில் பறக்கும் போது ஃபெலெக்ஸ் பாம்கார்ட்னருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.