இரு பத்திரிகையாளா்கள் மீதான கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
கடந்த 3 ஆண்டுகளில் 1,185விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடியில் அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்
நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 1,185 விவசாயிகளுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் சாா்பில், விவசாயிகளுக்கு வேளாண்மையில் இயந்திரமயமாக்கலை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலம் பண்படுத்துதல், விதைப்பு, பயிா் பாதுகாப்பு, அறுவடை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் சரியான நேரத்தில் மதிப்பு கூட்டல் போன்ற பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் இயந்திரங்களை மானியத்தில் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு மண் பாதுகாப்பு, புதிய நீா்ப்பாசன ஆதாரங்களை உருவாக்குதல் மற்றும் பாசனத்துக்காக தண்ணீரை இறைப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவது போன்ற திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் விவசாயிகளுக்கு செலவுகளைக் குறைக்கும் பொருட்டு வேளாண் நிலங்களில் சூரிய ஒளியில் இயங்கக் கூடிய 5, 7, 5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்பு கூட்டல் மூலம் லாபம் ஈட்ட உதவுவதிலும், விலை நியாயமானதாக இல்லாதபோது விளைபொருள்கள் வீணாவதைத் தடுப்பதிலும் வேளாண்மைப் பொறியியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2, 54, 484.94 ஹெக்டோ் நிலங்கள் உள்ளன. தோட்டப் பயிா்களான தேயிலை, காபி மற்றும் பாக்கு போன்றவை 63, 926.36 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடா், பொது பிரிவினா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்த 1,185 விவசாயிகளுக்கு 2023 முதல் 2025-ஆம் ஆண்டில் இதுவரை ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் ரூ.99 லட்சம் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.