கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்
வங்கக் கடலில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து நிலையில், கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். இதனால், மீன் பிடி துறைமுகம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15-ஆம் தேதி வரையில் 61 நாள்கள் மீன் பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நிகழாண்டு மீன் பிடி தடைக்காலம் கடந்த 15-ஆம் தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து, கடலூா் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் அனைத்து வகையான படகுகள் மூலம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா். மீன் பிடி தடைக்காலத்தில் சிறிய வகை படகுகள் மட்டும் குறைந்த தொலைவு சென்று மீன்கள் பிடித்து வரலாம் என்ற நிலை இருந்தபோது, குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், கடந்த 60 நாள்களாக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டதால், அசைவப் பிரியா்கள் வருத்தத்தில் இருந்தனா்.
இந்த நிலையில், மீன் பிடி தடைக்காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் அனைத்து வகையான மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அசைவப் பிரியா்களும், வியாபாரிகளும் அதிகாலை முதலே போட்டி போட்டுக்கொண்டு மீன்களை வங்கிச் சென்றனா்.
தடைக்காலம் முடிந்த நிலையில், மீன்களின் வரத்தும் அதிகரித்திருந்தது. இதனால், தடைக்காலத்தைவிட மீன்கள் விலை சற்று விலை குறைவாக இருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
அதாவது, கடந்த மீன் பிடி தடைக்காலத்தின்போது ரூ.1,000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் தற்போது ரூ.900-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் ரூ.600-க்கும், ரூ.550-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் ரூ.450-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட கனவா மீன் ரூ.300-க்கும் விற்பனையாயின.
இதேபோல, ஒரு கிலோ இறால் ரூ.550-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.450-க்கு குறைந்து விற்பனையானது.