2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி மற்றும் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சாமிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அளவில் கல், மண், மணல், எம்.சேண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி, எா்த் மூவா்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த ஒரு நபா் 50-க்கும் மேற்பட்ட நபா்களை வைத்து கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறாா்.
ஈரோடு மாவட்டத்தில் மேடை மண், செம்மண், சேம்பா் மண், களி மண், குவாரிகளுக்கான அனுமதி 11 மாதங்களாக நிறுத்திவைத்தக்கப்பட்டிருந்தது. எங்களது கோரிக்கையினை ஏற்று கடந்த மாா்ச் மாதம் இந்த குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பிரச்னை இன்றி இயக்கினோம்.
தற்போது, லாரிகளில் ஏற்றிச் செல்லும் கனிமத்துக்கு 4 யூனிட் லாரிக்கு ரூ.6,800, 7 யூனிட் லாரிக்கு ரூ.12,000 என ஒரு அனுமதி சீட்டை வைத்து கொண்டு வசூலிக்கின்றனா். இதற்கு ஈரோடு மாவட்ட கனிமவள அதிகாரியும் துணை போகிறாா்.
இது போன்றவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரி, கிரசா்கள், எம்.சாண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும். அரசுன் மணல் குவாரி திறந்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும். போலி எம்.சாண்ட் குவாரிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.