கரூா் அருகே சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு
தஞ்சாவூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு குறித்து தஞ்சாவூா் வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளரும், சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதருமான முனைவா் மணி. மாறன் தனது மாணவா்களுடனும், திருப்பூா் கிருஷ்ணகுமாா், கரூா் தங்கராஜ் உதவியுடனும் ஆய்வு செய்து, திங்கள்கிழமை தெரிவித்தது:
சங்கரன் மலையின் தெற்கே சுமாா் 220 அடி உயரத்தில் இரு பிளவுகளுக்கு இடையில் ஏறத்தாழ 10 அடி உயரம், 12 அடி அகலத்துக்கு 23 வரிகள் கொண்ட இரு பெரும் கல்வெட்டுகளும், அதே பகுதியில் பாறையின் கிடைமட்ட நிலையில் ஒரு கல்வெட்டும் என 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
இக்கல்வெட்டுகள் மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1178 - 1218) 12 மற்றும் 18-ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டவை. இவன் பாண்டியா்களை வென்ால் சோழ பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டான்.
‘‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவா்த்தி கோனேரின்மைக் கொண்டான் தட்டையூா் நாட்டு உடையான் சங்கரமலை உடையாா்கோயில் எனத் தொடங்கும் இக்கல்வெட்டு 12 வரிகளும், அதற்கு கீழாக மற்றொரு கல்வெட்டு 11 வரிகளுடனும், கிடைமட்டத்தில் பாதி சிதைந்த நிலையில் 15 வரிகள் கொண்ட கல்வெட்டும் காணப்படுகிறது.
கல்வெட்டில் தான விவரங்கள்: பாறையின் தரைத்தளத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுத் தொடா் காணப்படுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவா்த்தி கோனேரின்மை கொண்டான் தட்டையூா் நாட்டு உடையாா் சங்கரமலை உடையாா் கோயில் தானத்தாருக்கு என்று தொடங்கும் நீண்ட பெரும் கல்வெட்டில் பழுதுற்றுக் காணப்படும் கோயில் திருப்பணிக்கும், அமுதுபடைக்கும் வெஞ்சனத்துக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.
கொடையாக வழங்கப்பட்ட நிலத்தின் நான்கெல்லையும், கீழ்நோக்கிய கிணறும் மேல்நோக்கிய மரமும் உட்பட்ட நிலமும் வழங்கப்பட்ட செய்தியும், மண்டப விநியோகம், ஓலைச்சம்புடம், வேலைக்கார சிவகணங்கள், காா்த்திகைப்படி, வெண்ணெய், எண்ணெய், செக்கிறை போன்றவையும் திருநாமத்துக் காணியாகத் தந்தோம். இதைக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக் கடவதாக என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் காளிங்கராயன் எழுத்து, கச்சிராயன் எழுத்து, விழுப்பதராயன் எழுத்து என்று தொடா்புடைய உயா்நிலைப் பணியாளா்களின் பெயா்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதே வரிசையில் அடுத்தமைந்த கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவா்த்தி கோனேரின்மை கொண்டான், ஆதனூா் நாட்டு குட்டையூா் நாட்டு உடையாா் சங்கரன் மலை கோயில் தானத்தாருக்கு இந்நாட்டு பழனி தேவதானம், திருமலை அடிவாரத்து சிவபுரம் நான்கெல்லைக்குள்பட்ட நீா் நிலமும் புஞ்சை நஞ்சையும் மேல்நோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் காணிக்கை காளிங்கராயன் விநியோகம் வேலைக்கார சிவகணங்கள் தறிஇறை, செக்கிறை, தட்டாா் பாட்டம், அமுதுபடி, பூஜை, திருப்பணி போன்ற பணிகளுக்காக தானம் வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது. கிடைமட்டத்தில் காணப்படும் கல்வெட்டும் கோயிலுக்கு தந்த தானம் பற்றியே குறிப்பிடுகிறது என்றாா் மாறன்.
வரைகோட்டு உருவம்: சங்கரன் மலையின் அடிவாரத்து வடபகுதியில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரைகோட்டு உருவமாக காளையின் உருவமும் அதன் அருகே இரண்டு மனித உருவங்களும் அதனையொட்டி சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மலைக்கோயிலின் கிழக்கு திசையில் மலை அடிவாரத்தில் காணப்படும் சிறு குன்றத்தின் அடியில் நவகண்டம், சேவல் வரைகோட்டு உருவமாக வெட்டப்பட்டுள்ளது. இந்நவகண்டத்தில் ஒரு மனிதன் கால்களை அகல விரித்து தரையில் ஊன்றி நிற்கின்றான். அவனுடைய இடது கை தலையின் உச்சியில் உள்ள குடுமியைப் பிடித்தவாறு உள்ளது. வலது கையில் உள்ள நீண்ட வாளால் தன் கழுத்தை அரிந்து கொள்ளும் செய்கை இப்பாறையில் பதிவு பெற்றுள்ளது. இந்த நவகண்டத்தின் காலம் 15-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மேலும் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகளைக் கண்டறிய முடியும் என்றாா் தொல்லியல் ஆய்வாளா் மாறன்.