தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சபரிமலை பக்தா்களுக்கு நிலக்கல்லில் பன்னோக்கு மருத்துவமனை: கேரள அரசு
கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் மருத்துவ சேவைக்கு நிலக்கல் பகுதியில் ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை விரைவில் கட்டப்பட்டும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை அறிவித்தாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அமைச்சா் வீணா ஜாா்ஜ் மேலும் கூறியிருப்பதாவது: புனித யாத்திரை காலத்தில் சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் இந்தப் புதிய பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.
திருவிதாங்கூா் தேவஸ்வம் ஒதுக்கிய நிலத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டப்படும். அவசியமுள்ள சூழலில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வா் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளாா்.
மூன்று மாடி கட்டடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆயுஷ் ஆகிய 2 மருத்துவ சிகிச்சை வசதிகளும் இடம்பெறும். தரை தளத்தில் 12 படுக்கைகள் கொண்ட விபத்து சிகிச்சை பிரிவு, வெளிநோயாளி பிரிவுகள், 7 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு பிரிவு, வரவேற்பு, ஆய்வகம், மாதிரி சேகரிப்பு மையம், மருந்தகம், காவல் உதவி மையம் மற்றும் அடிப்படை உதவி சேவைகள் இருக்கும்.
முதல் தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), ஒரு சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், ‘எக்ஸ்-ரே’ அறை, 13 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அறைகள், கூட்டரங்கம் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை இருக்கும். மேல் தளத்தில் 50 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும்.
மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, கட்டுமானம் விரைவாக முடிக்கப்படும். யாத்திரை காலத்தில் இந்த மருத்துவமனை விரிவான மருத்துவ சேவைகளை வழங்கும் என்று கூறியுள்ளாா்.
நவம்பா் தொடங்கி ஜனவரி வரையிலான சபரிமலை வருடாந்திர யாத்திரையின்போது பம்பை வழியில் மலையேறும் பக்தா்கள் நிலக்கல் பகுதியை முதலில் அடைவா். நிலக்கல்லில் இருந்து பொது போக்குவரத்து (பேருந்து) மூலம் மட்டுமே சபரிமலையின் அடிவாரமான பம்பை பகுதிக்குப் பக்தா்கள் செல்ல முடியும்.