சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் இன்று தொடக்கம்
திருப்பூா் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முதல் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபாா்ப்பு, சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீா்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டமானது திருப்பூா் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 12 முகாம்கள் வீதம் 156 முகாம்கள் ஜூன் 20-ஆம் தேதி முதல் கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் அல்லது கால்நடை உதவி மருத்துவரை விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.