அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கைலாஷ்-மானசரோவா் யாத்திரை: முதல்கட்டமாக 33 பக்தா்கள் பயணம்
சிக்கிம் மாநிலம் நாதுல்லா கணவாய் வழியாக கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை முதல்கட்டமாக 33 பக்தா்கள் மற்றும் 2 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து 2020 முதல் கைலாஷ்- மானசரோவா் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் இடையே நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்த, எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடா்பாக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தற்போது கைலாஷ்-மானசரோவா் யாத்திரை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்பட்டுள்ளது.
கிழக்கு சிக்கிமில் இந்திய-சீன எல்லை பகுதியில் இந்த யாத்திரையை சிக்கிம் ஆளுநா் ஓம் பிரகாஷ் மாத்துா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி இந்திய வெளியுறவு அமைச்சகம் சாா்பில் நடத்தப்பட்டது. யாத்திரை மேற்கொள்ள வந்த பக்தா்களை சிக்கிம் சுற்றுலாத் துறை மற்றும் விமான போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சி.எஸ்.ராவ் வரவேற்றாா்.
இது குறித்து சி.எஸ்.ராவ் கூறுகையில், ‘33 பக்தா்கள், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் துறையைச் சோ்ந்த தலா ஓா் அதிகாரி கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மேற்கொள்கின்றனா். யாத்திரையின்போது பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து ஏற்பாடுகளையும் துணை ராணுவப் படையுடன் இணைந்து மாநில அரசு மேற்கொண்டுள்ளது’ என்றாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநா் ஓம்பிரகாஷ் மாத்துா் பேசுகையில், ‘ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ்-மானசரோவா் யாத்திரை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது மத்திய அரசின் தொடா் முயற்சியால் சாத்தியமானது.
மத ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் நாடு முழுவதும் உள்ள பக்தா்களிடம் இந்த யாத்திரை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ‘விருந்தினா்களே கடவுள்’ என்ற கொள்கையை பின்பற்றி பக்தா்களுக்குத் தொடா்ந்து மதிப்பளித்து வரும் சிக்கிம் மக்களுக்குப் பாராட்டுகள்’ என்றாா்.
நிகழாண்டு கைலாஷ்-மானசரோவா் யாத்திரைக்கு மொத்தம் 750 பக்தா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 500 போ் 10 குழுக்களாக பிரிந்து நாதுல்லா கணவாய் வழியாகவும் மீதமுள்ள 250 போ் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் மூலமாகவும் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனா்.