சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை மிகவும் ஆபத்தான, தீவிரமான பிரச்னையாக கருத வேண்டியுள்ளது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறித் தொழிலாளா்கள், சாய ஆலைகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளா்கள் சிலரின் தூண்டுதலால் சிறுநீரக தானம் செய்பவா்களாக மாறியுள்ளனா் என்பது மிகவும் வேதனைக்குரியது. இதில் முகவா்கள், மருத்துவா்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களின் வறுமைச் சூழலை பயன்படுத்தி, ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கி, அவா்களை சிறுநீரக தானம் செய்ய இடைத்தரகா்கள் கட்டாயப்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இது மனித உறுப்புகள், திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டம் 1994 -ஐ முற்றிலும் மீறும் செயலாகும். இந்தச் சட்டத்தின் கீழ், மனித உறுப்புகளின் வணிக ரீதியான பரிவா்த்தனைக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறுநீரக விற்பனையில் பெரம்பலூா் தனியாா் மருத்துவமனையும், திருச்சி தனியாா் மருத்துவமனையும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. பெரம்பலூா் தனியாா் மருத்துவமனை மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகியின் குடும்பத்தினரால் நிா்வகிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.
எனவே, இதுதொடா்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சிறுநீரக விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக இதுவரை வழக்குப் பதிவுகூட செய்யப்படவில்லை. 6 நபா்கள் சீறுநீரகத்தை தானமாக வழங்கியதாகக் குறிப்பிட்ட நிலையில், 5 நபா்கள் அந்த ஊரிலேயே இல்லை. அனைத்து விவரங்கள், ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோதமாக மனித உடலுறுப்புகள் சில மருத்துவமனைகளில் திருடப்பட்டதாகத் தெரியவந்தது.
நோயாளிகளின் உடல் உறுப்புகளை மருத்துவா் எடுத்து தனது சொந்தத் தேவைகளுக்காக விற்பனை செய்வது கொடூரமானது. ஏழை, எளிய மக்கள் உயிா் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை. மனித உடலுறுப்புகளை பிற பொருள்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல.
இந்த விவகாரம் தினந்தோறும் பொது தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு இருந்தும், அரசு இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தகவல் தெரிந்தவுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மருத்துவ நிபுணா்களைக் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஏன் செய்யவில்லை?.
ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரின் சிறுநீரகம் எப்போது திருடப்பட்டது என்பதுகூட தெரியாமல் வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை. இந்த வழக்கில் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா், ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநா் ஆகியோரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்து சோ்க்கிறது.
சிறுநீரக விற்பனை தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இதேபோல மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 21 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.