சென்னிமலை முருகன் கோயில் பணியாளா்கள் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை
சென்னிமலை முருகன் கோயில் செயல் அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கான குடியிருப்புகள், ரூ.2 கோடியே, 38 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கு, தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாா்.
அதன்படி, புதன்கிழமை சென்னையில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, சென்னிமலையில் இதற்கான பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சென்னிமலை அறங்காவலா் குழு தலைவா் ர.பழனிவேலு தலைமை வகித்தாா். தி.மு.க ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஆா்.எஸ்.செல்வம் (சென்னிமலை மேற்கு), சி.பிரபு (சென்னிமலை கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சென்னிமலை பேரூராட்சி தலைவா் ஸ்ரீதேவி அசோக், தி.மு.க சென்னிமலை நகர செயலாளா் எஸ்.எம்.ராமசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மு.மனோகரன், பாலசுப்பிரமணியன் கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், கோவில் ஆய்வாளா்கள் மாணிக்கம், குகன் மற்றும் பணியாளா்கள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.