திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்
வரும் ஆக. 8-ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்காக திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8-ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வையொட்டி, திருச்சானூா் கோயில் வளாகத்தில் சிறப்பு வரிசைகள், பக்தா்களுக்கான அன்ன பிரசாதம், குடிநீா் விநியோகம், அழகான மின் விளக்கு அலங்காரங்கள், மலா் அலங்காரங்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். பக்தா்கள் நிகழ்ச்சியைக் காண கோயில் வளாகத்தில் எல்ஈடி திரைகள் அமைக்கப்படும், மேலும் எஸ்விபிசி தொலைக்காட்சி மூலம் விரதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
மாலையில், தாயாா் மாடவீதிகள் வழியாக தங்க ரதத்தில் புறப்பாடு கண்டருள உள்ளாா்.
செளபாக்கியம்
செளபாக்கியம் திட்டத்தின் மூலம் பெண் பக்தா்கள் தாயாரின் ஆசிகளைப் பெறும் விதம் மங்கள பொருள்கள் அனைவரையும் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தெலங்கானா, ஆந்திரத்தில் தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ள 51 உள்ளூா் கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும் ‘செளபாக்கியம்’’ திட்டத்தின் மூலம், அட்சதைகள், மஞ்சள் நூல்கள், குங்குமம், வளையல்கள், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி புத்தகம் போன்ற மங்கள பொருள்கள் பெண் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படும்.
தேவஸ்தான கோயில்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் இந்த ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனா்.