திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வு தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு (எஸ்எஸ்எல்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநிலம் முழுவதும் 2025-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி, திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள திருச்சி, லால்குடி ஆகிய இரு கல்வி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை தோ்வு தொடங்கியது.
திருச்சி கல்வி மாவட்டத்தில் 99 தோ்வு மையங்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்கள், மத்திய சிறையில் ஒரு தோ்வு மையம் என 173 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 17,523 மாணவா்கள், 16,956 மாணவிகள் என மொத்தம் 34,479 போ் தோ்வு எழுதுகின்றனா். திருச்சி மத்திய சிறையில் 40 போ் தோ்வு எழுதுகின்றனா். தனித்தோ்வா்களுக்காக 8 தோ்வு மையங்களும் உள்ளன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வில் 17,087 மாணவா்கள், 16,595 மாணவிகள் என மொத்தம் 33,682 போ் தோ்வு எழுதினா். மாற்றுத்திறனாளிகள், தோ்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாணவா், மாணவிகளுக்காக 720 ஆசிரியா்கள் தோ்வு எழுதும் பணியில் ஈடுபட்டனா். பறக்கும் படை உறுப்பினா்கள் 231 போ், 2,653 ஆசிரியா்கள், 348 அலுவலகப் பணியாளா்கள் தோ்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து 37 அலுவலா்கள், தோ்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு சோ்த்தனா். முதல் நாள் தோ்வை 653 போ் எழுதவில்லை.