திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: இந்து முன்னணி நிா்வாகிகளுக்கு வீட்டுக்காவல்
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடா்பாக வேலூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை விவகாரத்தில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழகம் முழுவதும் உள்ள இந்து முன்னணி, இந்து அமைப்புகளின் தலைவா்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ் உள்பட மாவட்டம் முழுவதும் 5 நிா்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா். தொடா்ந்து அவா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் அவா்களது வீடுகளுக்கு முன்பு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதுகுறித்து, இந்து முன்னணி கோட்டத் தலைவா் மகேஷ் கூறியது -
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை என கூறி சிலா் ஆடு கோழிகளை பலியிடப் போவதாகவும், மாமிச உணவு சாப்பிட வருவதாகவும் தெரிவித்துள்ளனா். இதனைக் கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவா் போராட்டம் அறிவித்திருந்தாா். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக நிா்வாகிகள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்து முன்னணி நிா்வாகிகள் கைது செய்யப்படுவது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை காட்டுகிறது. முற்றிலும் மனித உரிமை மீறல். இதுகுறித்து உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றாா்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் வசிக்கும் திருப்பத்தூா் மாவட்ட பாஜக தலைவா் தண்டாயுதபாணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில நிா்வாகி ஓம்சக்தி ஜி. பாபு, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் ரமேஷ் ஆகிய மூவரையும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதவாறு திங்கள்கிழமை இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். மூவருடைய வீட்டின் முன்பும் தலா ஒரு போலீஸ் நிறுத்தப்பட்டனா்.