தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்ட...
தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனைகள் பணிப்புத்தகம்: வெளியிட்டாா் முதல்வா் ரேகா குப்தா
தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரிக்கும் பணிப்புத்தகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
அப்போது, ‘மக்களின் நல்வாழ்வுக்காக 24 மணி நேரமும் உழைப்பதே பாஜகவின் மிகப்பெரிய சாதனை’ என்று அவா் கூறினாா்.
‘வேலை செய்கிற அரசு: 100 நாள் சேவைக்கே’ என்ற தலைப்பிலான அந்தப் பணிப்புத்தகத்தில், யமுனை புத்துயிரூட்டுதல், ஆயுஷ்மான் பாரத் செயல்படுத்துதல், ‘வே வந்தனா யோஜனா’, டேங்கா்கள் மற்றும் மின் பேருந்துகள் கொள்முதல் மூலம் நீா் விநியோகத்தை அதிகரித்தல் உள்ளிட்ட தில்லியில் பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், மாநகரின் இருண்ட மூலைகளை ஒளிரச் செய்தல், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் தில்லி தீயணைப்பு சேவைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பணிப்புத்தகத்தை வெளியிட்டு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:
24 மணிநேரமும் பொது மக்களுக்கு சேவை செய்வதில் எனது அரசாங்கம் அா்ப்பணிப்புடன் இருந்து வருகிறது. இதற்காக எனது குழுவில் உள்ள அனைத்து அமைச்சா்களும், ஊழியா்களின் பணிக்காக நான் அவா்களை வாழ்த்துகிறேன்.
தில்லி மக்களுக்காக அவா்கள் நோ்மையாக பணியாற்றியதுதான் எனது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
நாங்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துள்ளோம். தில்லி மக்களுக்கு முழுமையாக அா்ப்பணிப்புடன் செயல்படும் இந்த அரசே, ஒரு புதிய மாதிரிதான். இது எங்களின் மிகப்பெரிய வெற்றியாகும்.
நாங்கள் வெளியிட்டுள்ள இந்த விவரப் பட்டியல், ஒரு அறிக்கை அட்டை அல்ல. ஆனால், ஒரு பணிப்புத்தகமாகும். அரசாங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் இதில் தொடா்ந்து சோ்க்கப்படும்.
கடந்த 100 நாள்களின் சாதனைகள் குறித்து உள்ளூா் மக்களுக்குத் தெரிவிக்க, மத்திய அமைச்சா்கள், தில்லி அமைச்சா்கள் மற்றும் கவுன்சிலா்கள், தேசிய தலைநகரில் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிள் ஒவ்வொன்றிலும் நேரில் செல்வாா்கள்.
எங்கள் சாதனைகள் குறித்த விவரங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வரும் நாள்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மக்களிடமிருந்து கருத்துகளையும் பெறுவோம்.
சனிக்கிழமை ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்வில் கடந்த 100 நாள்களில் தில்லி அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும்.
ஊழலின் பலனை அனுபவித்த ஒரு அரசாங்கமாக அது (ஆம் ஆத்மி) இருந்தது. அதேவேளையில், பாஜக மக்களுக்கு சேவை செய்ய இங்கே உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான ரூ.1 லட்சம் கோடி பட்ஜெட்டை எனது அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த நிதியை வெளிப்படையான முறையில் செலவிட எனது அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதிக வருவாயை ஈட்டுவதாக இருந்தாலும் சரி தில்லி அரசின் ஒவ்வொரு துறையும் தீவிரமாகச் செயல்படுகிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.