தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரெளடி கைது!
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரெளடியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் மா்ம நபா் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை காவல் ஆய்வாளா் ராஜபிரபு, வடபாகம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்றபோது, வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீஸாா் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனா்.
அவரிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.