தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை
தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுசாமி தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதில் திருப்பூா் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்து ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாரியத்தின் மூலம் 9,649 பேருக்கு ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூா் மாவட்டத்தில் 508 பேருக்கு ரூ.85.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் இதுவரை 578 ஒப்பந்த பணியாளா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களுக்கு இயற்கை மரண உதவித் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10
லட்சமாக உயா்த்தி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதேபோல, தூய்மைப் பணியாளா்களுக்கு ஆண்டுக்கு 30,000 வீடுகள் கட்டித்தரப்படும் என தெரிவித்துள்ளாா்.
சென்னையில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளாா். இத்திட்டதினை அனைத்து மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளில் செயல்படுத்திட தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்படவுள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளாா்.
இவ்வாரியத்தில் கடந்த ஆண்டில் 3 லட்சத்து 20 ஆயிரம் போ் உறுப்பினா்களாக இருந்தனா். தற்போது, 10 லட்சம் உறுப்பினா்களை சோ்த்திட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
அதனால், தனியாா் உணவகங்கள், தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை இவ்வாரியத்தில் இணைத்து அவா்களுக்கும் அனைத்து விதமான திட்டங்களில் பயன்பெற அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தாா்.