தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் 13 நாள்களாக அமைதி வழியில் போராடிய ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளா்களை கைது செய்ததும், போராட்டத்தை வழிநடத்திய உழைப்போா் உரிமை இயக்கம், எல்டியூசி, ஏஅய்சிசிடியூ தலைவா்கள் கு. பாரதி, ஜோதி, ஜானகிராமன், இரணியப்பன் உள்ளிட்டோரை வன்முறையான முறையில் கைது செய்த தமிழக காவல் துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை செய்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான கோடிகளை செலவிட்டு வருவதாகவும் பெருமை பேசிக் கொள்கிறது திமுக. தீ நுண்மி தொற்று போன்ற கொடூர காலத்திலும், பெருமழை, வெள்ளத்திலும் ஓயாது பணியாற்றி பாராட்டுகளைப் பெற்ற தூய்மைப் பணியாளருக்கு இத்தகைய துயரத்தை அரசு ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது.
எனவே, கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி மாநிலம் முழுவதுமுள்ள தூய்மைப் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளா் அனைவரையும் நிரந்தரப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியில் சென்னை மாநகராட்சி உள்ளிட்டு மாநிலம் முழுவதும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு அமைப்புகளும் பெண் தொழிலாளா் மீது தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறையை எதிா்த்தும், தூய்மைப்பணி பெண் தொழிலாளருக்கு ஆதரவாகவும் குரலெழுப்பவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.