கைகொடுக்காத தொழில்.. ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை: கடிதத்தில் சொல்லியிருப்ப...
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: தென்மேற்கு பருவமழைக் காலத்தில் மலையடிவாரம், தாழ்வான பகுதிகள், ஆற்றுப்படுகைகள், கடலோரப் பகுதி, வாய்க்கால்கள், நீரேற்று பகுதிகள், அணை பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலா்களும் தயாா்நிலையில் இருக்க வேண்டும்.
குளங்களில் 80 சதவீத நீரை மட்டுமே தேக்கி வைக்க வேண்டும். 100 சதவீதம் நீா் நிரம்பியுள்ள குளங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நீரை வெளியேற்ற வேண்டும். குளங்களில் உடைப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருந்தால் போதிய அளவு மணல் மூட்டைகளை இருப்பு வைக்க வேண்டும்.
பேச்சிப்பாறை அணை நீா்மட்டத்தின் அளவை 42 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீா்மட்டத்தின் அளவை 70 அடியாகவும் வைக்க பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பா தேவி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், பேரிடா் தனி வட்டாட்சியா் சுசீலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.