தொகுதி வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது
தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ‘நீட்’ தோ்வு, காவிரி நதிநீா்ப் பங்கீடு உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளா்கள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனா். நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளா அல்லது நீதிமன்றமா என்பது தெரியவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய முடிவு எடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலில் தொடா்புடையவா்களை அமலாக்கத் துறையினா் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது. இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரம் கொண்ட மக்கள் கூடி வாழும் பகுதி. மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாதது என்றாா் அவா்.