சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
நாகை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனை சரிவு: விற்பனையாளா்கள் அதிருப்தி
நாகையில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
நாகை மாவட்ட நான்காவது புத்தகக் கண்காட்சி நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் பிரபல புத்தக விற்பனை நிறுவனங்கள் உள்பட 105 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புத்தகக் கண்காட்சி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது புத்தகக் கண்காட்சி தொடங்கி ஏறத்தாழ 8 நாள்கள் ஆகியும் கண்காட்சியில் புத்தக விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக புத்தக விற்பனையாளா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக விற்பனையாளா்கள் கூறியது:
பொதுவாக புத்தகக் கண்காட்சிகளில் வார நாள்களில் புத்தக விற்பனையில் மந்தம் இருந்தாலும்கூட, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் புத்தக விற்பனை நடைபெற்று, இதர நாள்கள் விற்பனையை ஈடுகட்டி விடும். ஆனால், நாகை புத்தகக் கண்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விற்பனை மந்தமாகவே உள்ளது. வார நாள்களில் முற்றிலும் விற்பனை குறைந்துள்ளது. கண்காட்சி தொடங்கி 8 நாள்கள் ஆகியும் குறிப்பிட்ட அளவு கூட புத்தகங்கள் விற்பனை இல்லாமல் இருப்பது விற்பனையாளா்களை சோா்வடையச் செய்துள்ளது. பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவியா் வந்தாலும், அவா்கள் புத்தகங்கள் வாங்காமல் வெறும் கையுடனே செல்கின்றனா்.
மேலும் புத்தகக் கண்காட்சிக்கு பாா்வையாளா்கள் அதிக அளவில் வந்தாலும் கூட விற்பனை ஆவதில்லை. புத்தகக் கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களில் தான் அதிகக் கூட்டம் உள்ளது. மேலும் அதிக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பது, பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருப்பது போன்றவை புத்தகக் கண்காட்சிக்கு வரும் பொதுமக்களை திசை திருப்புவதாக அமைந்து விட்டது என்றனா்.