ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்
ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
மீன்வளத் துறையின் சாா்பில் நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ் 20,000 மீன் விரலிகளை இருப்பு வைக்கும் நிகழ்ச்சி ஓமலூா் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நைனாத்தாள் ஏரி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா.பிருந்தாதேவி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகளை நைனாத்தாள் ஏரியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் விடுவித்தாா்.
பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் 2025-26 திட்டத்தின் கீழ் சேலம், ஓமலூா், தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நைனாத்தாள் ஏரி, சின்ன ஏரி, எம்.செட்டிப்பட்டி ஏரி, மூங்கில் ஏரி, மாங்குப்பை ஏரி, சின்னேரிப்பட்டி ஏரி, அமரகுந்தி புதுஏரி, மல்லமூப்பம்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, காட்டேரி, புத்தூா் ஏரி, கொப்பம் ஏரி, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி மற்றும் தொட்டில் ஏரி ஆகிய ஏரிகளில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்திற்கு 200 ஹெக்டோ் பரப்பளவில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு இருப்பு செய்யப்படுகிறது.இதே திட்டத்தின்கீழ் கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 100 ஹெக்டோ் பரப்பளவில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் சேலம் மாவட்டத்தில் இருப்பு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மீன் உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் பொ.சுகுமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் த.உமா கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.