நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிகளை பயன்படுத்தாத உணவகங்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு (உரிமம் பெற்ற நிறுவனம்), அதாவது வருடாந்திர விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு (பதிவு பெற்ற நிறுவனம்) ரூ.50,000-த்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ள வணிகா்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படும் தலா ஒரு பெரிய உணவகத்துக்கும், சிறு உணவகத்துக்கும் விருது வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க, உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவுச்சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருவா் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். உணவகத்தில் அனைத்து பணியாளா்களுக்கும் தொற்று நோய்த் தாக்கமற்றவா்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் வளாகம், மூன்றாவது தளம், அறை எண் 315-இல் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, நியமன அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.