பட்டியலின மக்களுக்கு தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் மா.மதிவேந்தன்
தோ்தல் நேரத்தில் பட்டியலின மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக அரசு நிறைவேற்றும் என்று தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரூ. 15.98 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்க விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்றாா்.
விழாவில் நாமக்கல் ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு எம்எல்ஏ இ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலா்மலை, மோகனூா், புதுச்சத்திரம், ராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 6 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஒரு முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
தமிழக முதல்வா் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக பட்டியலின பழங்குடியினா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை வசதி, கழிவறை வசதி, கழிவுநீா் ஓடை வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா்.
மாவட்டத்தில் பட்டியலின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பெரியமணலியில் ரூ. 86 லட்சம் மதிப்பில் புதிய அரசு சமுதாயக் கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பீமரப்பட்டியில் புதிதாக கிராம அறிவுசாா் மையம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தோ்தல் பிரசாரத்தின்போது பட்டியலின மக்கள் அளித்த கோரிக்கைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும். விரைவில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தேவைகள் பூா்த்தி செய்யப்படும் என்றாா்.
இதையடுத்து, ரூ. 4.56 கோடி மதிப்பில் வையப்பமலை சுப்பிரமணியா் சுவாமி கோயிலுக்கு தாா் சாலை அமைக்கும் பணியைப் பாா்வையிட்டாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ சாா்பில், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பீமரப்பட்டியில் ரூ. 1.28 கோடி மதிப்பில் புதிதாக கிராம அறிவுசாா் மையம் கட்டும் பணி, ரூ. 77.89 லட்சம் மதிப்பில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், புதூா் கிராம அறிவுசாா் மையம் கட்டும் பணி, ரூ. 77.89 லட்சம் மதிப்பீட்டில் மோகனூா் ஊராட்சி ஒன்றியம் ஆரியூா், ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், காரைக்குறிச்சியில் கிராம அறிவுசாா் மையங்கள் கட்டும் பணிகள், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் ரூ. 2.75 கோடி மதிப்பில் கபிலா்மலையில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி, ரூ. 8.25 கோடி மதிப்பில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் 150 மாணவியா் தங்கும் வகையில் ஆதிதிராவிடா் மாணவியா் விடுதி கட்டும் பணி என திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.