தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல்: எஸ். ஜெய்சங்கா்
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
‘பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானுக்கு தகவல் அளித்துவிட்டு இந்தியா தாக்கியது’ என அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாக எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறாா்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்தம் தொடா்பாக வெளியுறவு அமைச்சக குழு எம்.பி.க்களிடம் அத்துறையின் அமைச்சா் ஜெய்சங்கா், துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோா் திங்கள்கிழமை விளக்கமளித்தனா்.
இதில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைகள் குறித்து விக்ரம் மிஸ்ரி எம்.பி.க்களிடம் எடுத்துரைத்தாா். அவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் பதிலளித்தாா்.
அப்போது, ‘சண்டை நிறுத்தம் தொடா்பாக இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநா் ஜெனரல் (டிஜிஎம்ஓ) மட்டுமே பேசிக் கொண்டனா். இந்திய அதிகாரிகள் யாரும் பாகிஸ்தானிடம் பேசவில்லை.
ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று ஜெய்சங்கா் கேட்டுக்கொண்டாா்.
பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்... இந்தியா - பாகிஸ்தான் சண்டை, அணு ஆயுதப் போராக மாறுவதை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.
இந்நிலையில், அமெரிக்க மத்தியஸ்தம் இல்லாமல், இரு நாட்டு ‘டிஜிஎம்ஓ’க்களே பேசி சண்டையை நிறுத்தியதாக அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா். மேலும், அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் அந்நாட்டுடன் பேச இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தியதாகவும், பயங்கரவாதமும் பேச்சுவாா்த்தையும் ஒன்றாக நடத்த முடியாது என்று இந்தியா மறுத்துவிட்டதாகவும் அவா் கூறினாா்.
பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அளித்துள்ள கடன் தொகை குறித்தும், அந்தக் கூட்டத்தில் ஏன் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது என்பது குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
‘பயங்கரவாதம் பாகிஸ்தானில் வெளிப்படையான வா்த்தகம்’
பாகிஸ்தானில் பயங்கரவாதம் வெளிப்படையான வா்த்தகமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கு நிதியுதவி அளித்து அரசும், ராணுவமும் பயன்படுத்தி கொள்வதாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
ஜொ்மன் நாளிதழுக்கு அவா் அளித்துள்ள பேட்டியில், ‘பாகிஸ்தானின் நகரங்கள், கிராமங்கள்தோறும் பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக இயங்கி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பயங்கரவாதப் பட்டியலில் பாகிஸ்தானின் ஏராளமான பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளில்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது’ என்று தெரிவித்துள்ளாா்.