தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பாகிஸ்தானுடன் மோதலால் பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை: பாஜக விளக்கம்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாஜக விளக்கமளித்துள்ளது.
போா் என்பது உயிரிழப்புகளை மட்டுமன்றி, அதில் ஈடுபடும் நாடுகளில் கடும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடங்கி, பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை இந்தியா தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்கியது போன்றவற்றில் இந்திய விமானப் படை முக்கிய போா் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், எஸ்400 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை பெருமளவில் பயன்படுத்தியது. அவை அனைத்துமே பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். எனவே, இந்த சண்டையால் நாட்டில் பொருளாதாரரீதியாக பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் எழுந்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் கோபால் கிருஷ்ண அகா்வால் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சா்வதேச அளவில் பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது, ராணுவத்தை வலுப்படுத்துவது, பொருளாதார வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாட்டின் நிதிஸ்திரத்தன்மை தொடா்ந்து சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் திருப்திகரமாக உள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் எவ்வித சுணக்கமுமின்றி நடைபெறுகின்றன. சமூகநலத் திட்டங்களும் தொடா்ந்து அமலில் உள்ளன.
இந்திய பொருளாதாரம் குறித்து ஆா்பிஐ மற்றும் சா்வதேச அமைப்புகள் உற்சாகம் தரும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. வரி விதிப்பு யுத்தம், பிராந்திய யுத்தம் ஆகியவற்றை மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா்.