``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பாலாற்றை மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை: முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன்
பாலாற்றை மாசுபடாமல் மீட்பது, குரோமிய கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தாா்.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியே பாயும் ஜீவநதியான பாலாற்றில் விதிகளை மீறி திறந்துவிடப்படும் தோல் கழிவுநீா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரால் மாசடைகிறது. இதை ஆய்வு செய்து பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூா் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சாா்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு ஆய்வு செய்து 4 வாரத்துக்குள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.
இக்குழுவினா் முதல்கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்கும் ராணிடெக் பொது தோல் சுத்திகரிப்பு நிலையம், சிப்காட் பகுதியில் கடந்த 2003- ஆம் ஆண்டு முதல் தேங்கி கிடக்கும் பல லட்சம் டன் குரோமிய கழிவுகள், ஆற்காடு - ராணிப்பேட்டை பாலாற்றுப் படுக்கையில் கழிவுநீா் கலக்கும் இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா் குழு தலைவரும், முன்னாள் நீதிபதியுமான சத்தியநாராயணன் தெரிவித்தது:
பாலாறு தோல் கழிவு, குரோமிய கழிவு, உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரால் மாசடைவதாக தெரிய வந்துள்ளது. இது தொடா்பாகவும், இவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணிடெக் பொது தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் நாட்டில் உள்ள சிறந்த சுத்திகரிப்பு நிலையமாக உள்ளது. ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் கடந்த 2003 -ஆம் ஆண்டு முதல் தேக்கி வைக்கப்பட்டுள்ள குரோமிய கழிவுகளால் நிலம், நீா் மாசடைவது தெரிய வந்துள்ளது. இந்த குரோமியக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற ஒப்பந்தம் விடப்பட்டும் யாரும் முன் வராததால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆலோசிக்க உள்ளோம்.
தொடா்ந்து பாலாறு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அடுத்த கட்டமாக இரு வாரம் கழித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அதற்குப் பின்னா், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஆய்வை அறிக்கையாக சமா்ப்பிக்க உள்ளோம்.
மேலும் குப்பைகளைக் கையாள்வது, அவற்றை அப்புறப்படுத்துவதில் பொதுமக்களுக்கும் பொறுப்புணா்வு உள்ளது. இதை ஊடகங்களும் கையில் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது ராணிடெக் தலைவா் பிஆா்சி.ரமேஷ்பிராசத் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.