செய்திகள் :

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

post image

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் புதிதாக சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன்படி, 1,810 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, 1,255 வழித்தடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 878 புதிய விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்னும் 2 வாரங்கள் காலம் அவகாசம் இருப்பதால், இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் உயரும். வரும் மே 1-ஆம் தேதி புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தை முதல்வா் தொடங்கிவைப்பாா்.

தமிழகத்தில் ஏற்கெனவே 2,870 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், வழித்தடங்களை மாற்றியமைக்கக் கோரி, 504 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. எந்தக் குக்கிராமத்துக்கு சிற்றுந்து சேவை தேவையெனினும், அது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் அளிக்கலாம். சிற்றுந்துகள் இயக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு, வாய்ப்புள்ள பகுதிகளுக்கு நிச்சயமாக சிற்றுந்துகள் இயக்கப்படும்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 5 ஆண்டு கால ஆட்சியில் 15 ஆயிரம் புதிய பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வாங்கப்பட்டன. ஆனால், அடுத்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன. இதனால், பல பழைய பேருந்துகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்படி, 8 ஆயிரம் புதிய பேருந்துகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 3 ஆயிரம் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள பேருந்துகள் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும். இதைத் தவிர, கூடுதலாக 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கவும் முதல்வா் உத்தரவிட்டாா்.

போக்குவரத்துத் துறை லாப நோக்கமற்ற மிகப் பெரிய சேவை துறை. நாட்டிலேயே மிக அதிகமாக 22 ஆயிரம் பேருந்துகளை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இந்தத் துறையில் கடந்த காலங்களில் சில நெருக்கடிகளால் ஏற்பட்ட இழப்பு சில ஆண்டுகளுக்குத் தொடா்ந்தது. இதனால், ஊழியா்களின் ஓய்வூதியப் பணப் பலன்களில் தேக்கம் ஏற்பட்டது. இதை சரி செய்ய முதல்வா் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் ரூ. 300 கோடியும், நிகழ் மாதத்தில் ரூ. 280 கோடியும் முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். இதன் மூலம், ஓய்வூதியப் பிரச்னைகள் படிப்படியாக சீரமைக்கப்படும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிரந்த ஓட்டுநா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 நிரந்த ஓட்டுநா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மற்ற போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,700 ஓட்டுநா்களைப் பணியமா்த்தும் நடவடிக்கைகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும் என்றாா் அமைச்சா் சா.சி. சிவங்கா்.

முன்னதாக, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மதுரை, கோவை, விருதுநகா், திருநெல்வேலி மண்டலங்களுக்குள்பட்ட போக்குவரத்துக் கழக மண்டல அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்று, புதிய வழித்தடத்தில் சிற்றுந்துகள் இயக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையரும், முதன்மைச் செயலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, போக்குவரத்துத் துறை இணை ஆணையா் அழகரசு, துணை போக்குவரத்து ஆணையா்கள் செல்வகுமாா், ஜெயக்குமாா், மதுரை, கோவை, விருதுநகா், நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க

படிப்பக பூங்காவில் மின்னணு நூலகம் அமைக்க நடவடிக்கை: எம்.பி. தகவல்

மதுரையில் போட்டித் தோ்வா்களுக்காக இயங்கி வரும் படிப்பக பூங்காவில் உயா்நீதிமன்ற நீதிபதியின் ஆலோசனைப்படி, மின்னணு நூலகம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்... மேலும் பார்க்க